குஜராத்தில்அபார வளர்ச்சி: சென்னையை கலக்கினார் மோடி

11/15/2010 10:29:00 AM

ஒவ்வொரு சந்திப்பிலும் ஆச்சரியத்தைக் கொடுக்கும் திறன் ஒருவருக்கு உண்டென்றால், அவர், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி என உறுதியாகச் சொல்லலாம்.குஜராத்தில் நடக்கும் முதலீட்டாளர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு, தொழிலதிபர்களை அழைக்க சென்னை வந்தார் மோடி. அதன் மூலம், அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

தொழிலதிபர்கள் மத்தியில் அவர் பேசியதில் இருந்து சில:இன்று, வர்த்தக முறை முற்றிலும் மாறிவிட்டது. எதையும், சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருந்த இடத்தில் இருந்தபடியே உங்கள் தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம். அதற்கு குஜராத், தன்னை முழு அளவில் தயார்படுத்திக் கொண்டுள்ளது.முதல் காரியமாக, அரசு நிர்வாகத்தின் அத்தனை மரபுகளையும் உடைத்தெறிந்தோம். இழுத்தடிப்பு, பொறுப்பற்றத்தன்மை, சோம்பல், லஞ்சம் என, அரசு நிர்வாகத்தின் அவலட்சணமாக அறியப்பட்ட அனைத்தையும் தகர்த்தோம்.இன்று, ஆசியாவிலேயே, 24 மணி நேரமும் தடையற்ற, தரமான மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் குஜராத் தான்.

மாநிலம் முழுவதும், 2,200 கிலோ மீட்டருக்கு எரிவாயுக் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை கிடையாது.ஒவ்வொரு குக்கிராமத்திலும், "பிராட் பேண்ட்' இணைப்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ம் தேதி, மாநிலத்தில் உள்ள, 1.5 கோடி மாணவர்களுடன், தலைநகரில் இருந்தபடியே உரையாடுகிறேன். முதல்வர் அலுவலகத்திலும் வீடியோ கான்பரன்சிங் வசதி  உள்ளது.கடந்த ஏழு ஆண்டுகளாக, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி இரட்டை இலக்கத்திலேயே உள்ளது. விவசாயத்தில் தொடர்ந்து 9.5 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளோம். இது, தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகம். வைர வர்த்தகத்தில் குஜராத் தான் முதலிடம்.எங்கள் மாநிலத்தில் தொழில் தகராறுகள் இல்லை; தொழிலாளர்கள் பிரச்னை இல்லை; இதனால், 10 ஆண்டுகளாக தொழில் துறை, 12 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. இதோடு ஓய்வதில்லை; இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும் என்பது தான் எங்கள் தீர்மானம்.முதலீடுகளை முன்னிறுத்தியே, "சிறப்பு முதலீட்டு மண்டலங்கள்' (எஸ்.ஐ.ஆர்.,) 30 அமைக்க உள்ளோம். சர்வதேச பொருளாதார நகரம் (கிப்ட்) அமைக்க உள்ளோம். மாநிலத்தின் மொத்த வருவாயில், 30 சதவீதம் தொழிற்சாலைகள், 30 சதவீதம் விவசாயம், 30 சதவீதம் சேவைத் துறைகள் என்பது தான் எங்கள் சமன்பாடு. அப்போது தான், வளர்ச்சிப் பாதையில் இருந்து எந்தப் பகுதியும் விடுபடாமல் இருக்கும்.நான் முதல் முறை முதல்வராக பொறுப்பேற்றபோது, குஜராத் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாகத் திகழ்ந்தது. மின்சார பற்றாக்குறை நிலவியது. நிதிப் பற்றாக்குறையும் இருந்தது.

இன்று தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோம். மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வினியோகிக்கிறோம். நிதி நிலைமையில் உபரி மாநிலமாக உயர்ந்துள்ளோம்.குஜராத் அரசு இதுவரை ஏகப்பட்ட விருதுகளைப் பெற்று இருக்கிறது. விருது பெறுவது என்பது, ஏதோ வாராந்திர நிகழ்ச்சி மாதிரி ஆகிவிட்டது. 200க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்திருப்பதால், எது, எதற்கானது என்பது கூட நினைவில் இருப்பதில்லை.சமீபத்தில் வாங்கிய ஒரு விருதை மட்டும் சொல்கிறேன். குஜராத் முதல்வர் அலுவலகத்துக்கு ஐ.நா.,வின் சர்வதேச விருது வழங்கப்பட்டு உள்ளது (கைதட்டல்). இதுவல்ல விஷயம். எதற்காக இருந்த விருது வழங்கப்பட்டது என்பது தான் விஷயம்.முதல்வர் அலுவலகத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, அணுகுமுறைக்காக இந்த விருது கிடைத்துள்ளது (பலத்த கைதட்டல்).

முதல்வர் அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டதை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாங்கள் பெற்றிருக்கிறோம்.உங்கள் கனவுகளை நனவாக்க, உங்களோடு நான் இருக்கிறேன். இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாதீர்கள் என்று மட்டும் தான் சொல்லுவேன்.இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

தொடர்ந்து, தொழிலதிபர்களுடன் கேள்வி - பதில் நிகழ்ச்சி நடந்தது. 70க்கும் மேற்பட்ட கேள்விகள் குவிந்தன. 10 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தவர், மற்றவற்றுக்கு இ-மெயில் மூலம் பதில் அனுப்புவதாக உறுதியளித்தார்.

குறுந்தொழில்களில் கவனம் : வந்திருந்த தொழிலதிபர்களில் ஒருவர், சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு (எஸ்.எம்.இ.,) வழங்கப்படும் வசதி வாய்ப்புகள் பற்றி மோடியைக் கேட்டார். அவர் அளித்த பதில்:எப்போதுமே எங்கள் முதல் முன்னுரிமை, சிறு மற்றும் குறுந்தொழில்களுக்குத் தான். வங்கிக் கடனில் இருந்து, அனைத்து வகையான அனுமதிகள் வரை எதுவாக இருந்தாலும், எஸ்.எம்.இ.,க்கு தான் முன்னுரிமை. இவற்றின் மூலம் தான் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. குஜராத் மாநிலத்தின், 70 சதவீத தொழில் வெற்றி எஸ்.எம்.இ.,க்கள் மூலம் தான் கிடைத்துள்ளது.இந்தியாவில் அதிகம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் குஜராத் மாநில அரசின் பங்கு, 78 சதவீதம். மொத்த இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களும் சேர்ந்து, 22 சதவீதம் தான். இதற்கு முக்கிய காரணம், சிறு மற்றும் குறுந்தொழில்களில் நாங்கள் கவனம் செலுத்துவது தான்.

நெருக்கடியிலும் நெத்தியடி : குஜராத் மாநில தொழில்துறைச் செயலர் சாகு பேசியதாவது:கடந்த 2009ல், உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி நிலவிய நேரத்தில், "துடிப்பான குஜராத்' மாநாட்டை நடத்த வேண்டுமா என, அனைத்து தரப்பில் இருந்தும் கேள்வி எழுந்தது. தொழிலதிபர்களும், அடுத்த ஆண்டு வைத்துக்கொள்ளலாமே என அறிவுரை வழங்கினர்.இது தொடர்பாக முதல்வரிடம் கருத்து கேட்டோம். அவர் சொன்னார்: நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள இது தான் சரியான நேரம். நிச்சயம், 2009ல், மாநாடு நடக்கும் என்றார். சொன்னபடியே நடந்தது. 12 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான வாக்குறுதிகளைக் கவர்ந்தது; 8,663 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.இவ்வாறு சாகு பேசினார்.

ஒபாமா மீது மறைமுக தாக்கு : "குஜராத்தில் தொழில் துவங்க விரும்புகிறேன். உங்களால் எந்த விதத்தில் உதவ முடியும்?' என, இன்னொருவர் கேட்டார். அதற்கு மோடி சொன்னது:தாராளமாய் வரவேற்கிறோம். நான் ஒன்றும், அமெரிக்க அதிபர் ஒபாமா மாதிரி இங்கு வரவில்லை. பிற்பகல் 2  முதல் மாலை 4 மணி வரை எங்கள் அதிகாரிகள் அனைவரும் இங்கு தான் இருப்பர். அதற்குள், குஜராத்தில் என்னென்ன செய்யப்போகிறீர்கள்? என்னென்ன தேவை? என்பவை பற்றி முடிவெடுக்கும் திறன் உங்களிடம் இருக்கிறதா? ஆமெனில், கையோடு அதற்கான உத்தரவைப் பெற்றுச் செல்லலாம்.மோடி இவ்வாறு பேசியதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. "அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியா வந்தபோது வெறுங்கையோடு வந்தார். அமைச்சர்கள், அதிகாரிகளோடு வராமல், தொழிலதிபர்களோடு வந்து, இங்கு ஏராளமான ஆர்டர்களை வாங்கிச் சென்றுவிட்டார். அதனால் தான், இரு நாட்டு ஒப்பந்தம் போன்ற விஷயங்கள் கையெழுத்தாகவில்லை' என ஒரு பேச்சு உண்டு."அவ்வாறில்லாமல், "ஒட்டுமொத்தமாக அதிகாரிகள் குழுவோடு வந்திருக்கிறேன். எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் இப்போதே போட்டுக்கொள்ளலாம்' என்பது தான் மோடியின் கருத்தாக இருந்தது.
- ஆர்.ரங்கராஜ் பாண்டே
நன்றி தினமலர்

Thanks
Thamilselvan Subramaniam

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook